TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

நடனம்

தியாகராஜரின் பக்தியை விளக்கும் நடனம்

சென்னை... அக்டோபர்...18

கலாசாகரின் வெள்ளிவிழா வியாழக்கிழமை(16-ம் தேதி) நடைபெற்றது. இவ்விழாவில் கலாசாகரின் இயக்குநர் குருமாலதி தோதாத்ரியின் மாணவிகள் தியாகராஜரின் பக்தியை விளக்கும் வகையில் பரதநாட்டிய நிகழ்ச்சியை அளித்தனர்.

முதலில் "விஜயஷ்ரீ" ராகத்தில் அமைந்த "வரநாரத" பாடலில் நாரதர் தியாகராஜருக்கு "ஸ்வரார்ணவம்" என்கிற புத்தகத்தை அளிக்கும் நிகழ்ச்சியை பரதநாட்டியமாக ஆடினர்.

தியாகராஜர் நூறு கோடி ராமஜபம் செய்தவர், அதன் பலனாக ராமர் தரிசனம் அளித்தார். இதை விளக்கும் வகையில் பாலகனகமய ஆடப்பட்டது. அதில் சரணத்தில் "ராரா தேவாதி தேவா" என்று தியாகராஜர் உருக்கமாக அழைப்பதை மிக உணர்ச்சி பூர்வமாக சித்தரித்தனர். "க்ஷரீ சாகரா (தேவகாந்தாரி)" என்ற பாடலில், திரவுபதிக்கு ஆடை கொடுத்து காப்பாற்றினாயே, கஜேந்திரனை முதலையின் பிடியிலிருந்து காப்பபாற்றினாயே, பத்ராசல ராமதாசை காப்பாற்றினாயே, என்னை காப்பாற்றக் கூடாதா என்ற தியாகராஜர் கேட்கும் விதத்தை குருமாலதியின் மாணவிகள்பல வேடங்களில் மிக உயர்தரமான பாவங்களை வெளிப்படுத்தினர்.

குருமாலதியின் நட்டுவாங்கமும், சரயூ சீனிவாசனின் பாட்டும் இதில் குறிப்பிடத்தக்கது.


பொன்விழா நடன அரங்கேற்றம்

சென்னை... ஆகஸ்ட்...19

புகழ்பெற்ற நடனக்கலைஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் மாணவிகளான சங்கீதா மற்றும் அமிருதபிரியாவின் நடன அரங்கேற்றம் சமீபத்தில் சென்னை நாரத கான சபாவில் நடைபெற்றது. இந்திய சுதந்திரத்தின் பொன்விழாவும், நிருத்யோதயாவின் பொன்விழாவும் ஒன்றாக சென்னை நாரத கான சபாவில் கொண்டாடப்பட்டன. இதில் இந்த இருவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் நாட்டையில் தத்தோடகதாம் என்னும் தேவியின் புகழை இயம்பிடும் மலரஞ்சலி ஆடப்பட்டது. பின்னர் முருகனைப் பற்றிய கவுத்துவத்தையும், ஜதி ஸ்வரத்தையும் சங்கீதாவும், அமிருதபிரியாவும் சுழன்று சுழன்று ஆடினர். மிகவும் கடினமான ஸ்வரக்கோர்வைகளுக்கு சங்கீதாவும், அமிருதபிரியாவும் தெளிவாக பங்கீடு செய்து கொண்டு ஆடியது, பார்ப்பவர் உள்ளங்களை கவர்வதாக இருந்தது. மகாகவி பாரதியின் தமிழ்நாட்டை பெற்ற தாயென்று கும்பிடடி பாப்பா என்ற வரிக்கு இவர்கள் இருவரின் அபிநயம் ரசிகர்களின் நெஞ்சங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக குந்தளவராளி ராகத்தில் நடமாடும் அழகே அழகு என்ற பதத்திற்கு பல நடைகளை இவர்கள் மாறி மாறி வழங்கியது மெய்சிலிர்க்க செய்வதாக இருந்தது.

நிகழ்ச்சியை பார்த்தவர்கள் சுதந்திர பொன்விழா கொண்டாட்டங்களை ஒட்டி நல்லதொரு நடனத்தை கண்டுகளித்த திருப்பியடைந்தனர் என்றால் அது மிகையல்ல.

காயத்ரி கண்ணன், விஜயா கிருஷ்ணனின் பாட்டும், ஜானகி மற்றும் ரேகாவின் நட்டுவாங்கமும் அழகுக்கு அழகு சேர்ப்பதாக இருந்த து என்றால் அது அதிகப்படியான வார்த்தையல்ல.

Back   Next   Top