TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

பிரகதீஸ்வரர் ஆலயம்
தஞ்சை

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் சிறப்பம்சங்கள்

Bhradeshwarar Temple_1 பாரத திருநாட்டின் புகழ் மிக்க கோயில்களில் ஒன்று தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்.

  • இது பெரிய கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
  • உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நந்தியை கொண்டது.
  • ஒரே கல்லால் ஆன கோபுர விமானம் அமைய பெற்றது.
  • கோபுரத்தின் நிழல் பூமியில் விழாதது.
  • கர்ப்பகிரகத்தில் மட்டும் சூரிய வெளிச்சம் படும் அற்புதமான கட்டிட கலையால் உருவாக்கப்பட்டது.
- இப்படி இன்னும் பல சிறப்புகளுக்கு உரியது தஞ்சை பெரிய கோயில்.

சோழநாட்டு வரலாறு

`சோழவள நாடு சோறுடைத்து'

என்று கூறப்படும் வளமையான பூமி தஞ்சாவூர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றும் ஒரு சிறப்பு பெயர் இதற்குண்டு.

சோழர்களின் தலைநகராக இருந்த தஞ்சாவூர், 9-ம் நூற்றாண்டி ல் ராஜ ராஜ சோழனால் பல சிறப்புகளைப் பெற்றது.

ராஜ ராஜ சோழனுக்கு பிறகு, அவரது மகன் ராஜேந்திர சோழன் காலத்தில், தலைநகர் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றப்பட்டது.

பின்னர், பாண்டியர்களின் எழுச்சி, கி.பி. 13 - ம் நூற்றாண்டில் தஞ்சையின் வீழ்ச்சியாக அமைந்தது. 15-ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் தஞ்சையை கைப்பற்றினர். 16-ம் நூற்றாண்டில் மராட்டிய அரசு தஞ்சையை கைப்பற்றியது. வெங்காஜி மன்னர் முதலில் தஞ்சையை ஆளத் தொடங்கினார். பின்னர், சரபோஜி அரசரானார்.

சரபோஜி மன்னர், தஞ்சைக் கோட்டையை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டு, மற்ற பகுதிகளை, கிழக்கிந்திய கம்பெனி வசம் தர ஒப்புக் கொண்டு, ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

சரபோஜி மன்னர், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு, அரிய பல நூல்களைச் சேகரித்து, சரஸ்வதி மகால் என்னும் காலத்தால் அழியாத ஒரு நூலகத்தை ஏற்படுத்தினார்.

சரபோஜி மன்னருக்கு பிறகு, அதாவது 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டல்-ஹௌசி பிரபு, வாரிசு அற்ற நிலையில் இருந்த தஞ்சையை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வந்துவிட்டார்.

அதற்குப் பின் நடந்த விஷயங்கள் நமக்கு தான் தெரியுமே...

பெரிய கோயிலின் அற்புதங்கள்

Bhradeshwarar Temple_2 கி.பி. 986-ல் பட்டத்திற்கு வந்த ராஜ ராஜ சோழன், எட்டுத்திக் கும் சென்று சேர, பாண்டிய, பல்லவ, சாளுக்கியர்களை வெற்றி கொண்டு அவர்களின் நாடுகள் அனைத்தையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். தன் புகழுக்கு ஏற்ற வகையில், சோழ மண்டலத்தில் ஆலயம் ஏதும் இல்லாததால், பல சிறப்புகளுடன் கூடிய ஆலயம் ஒன்றை நிர்மாணிக்க முடிவு செய்தார். அதன்படி கி.பி., 1003-ல் தொடங்கி, கி.பி. 1010 வரை ஏழு ஆண்டு காலத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை உருவாக்கினார்.

இந்தத்தலத்தில் முன்பு பராசர முனிவர் தவமிருந்தார். முனிவரின் தவத்தை தஞ்சன், தாரகன், தாண்டகன் என்ற அசுரர்கள் கெடுத்தும் அவரைத் துன்புறுத்தியும் தொல்லை பல தந்தும் வந்தனர். பராசர முனிவர் இது குறித்து மகாவிஷ்ணுவிடமும், துர்க்கையிடமும் முை பிரார்த்திக்க அவர்களில் மகாவிஷ்ணு தஞ்சன் , தாண்டகனை அழித்தார். துர்க்கை, தாரகனை அழித்தாள். உயிர்விடும் தருவாயில் இருந்த தஞ்சன் மகாவிஷ்ணுவிடம் இந்தத் தலம் தனக்கு பின்னும் தனது பெயரை தாங்கியதாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்க அவரும் சரியென்று சொல்லத் தஞ்சன் இருந்து, இறந்த தலம்ஆதலால் தஞ்சாவூர் ஆனது! தஞ்சையின் வடக்குப் பகுதியில் திருவுடைக்கோடி அம்மனாக துர்க்கையில் அம்சங்கள் அனைத்தையும் கொண்டு, விஷ்ணு எழுந்தருளியுள்ளார்.

வடக்கில் உள்ள உத்தர மேருவுக்கு ஏற்ப, தெற்கே தட்சிணமேருவை சவாலாக ஏற்று உருவாக்கியுள்ளான் ராஜ ராஜ சோழன். கருவரையின் மேலே 96 அடி சதுரமான அடித்தளத்தின் மேல் 216 அடி உயர விமானம் எழுந்துள்ளது. இது அடி முதல் நுனி வரை ஒரே கல்லால் உருவாகி உள்ளது.

கோவில் விமானத்தின் உச்சியில் 25 அடி சதுரம் உள்ளது பிரம்மாண்டக்கல். அது 80 டன் எடை கொண்டது. இந்த கல் அழகி என்ற கிழவியின் வீட்டுக்கு அருகில் இருந்ததாம். நான்கு மைல் தூர ம் சாரம் கட்டி சிற்பிகள் இதனை விமானத்தின் மேல் ஏற்றினர் சாரம்தொடங்கிய ஊர் சாரப்பள்ளம் என்றும் வழங்கப் பெறுகிறது. பன்னிரண்டு அடி உயரம் கொண்ட கலசம் இந்த விமானத்தின் உச்சியில் உள்ளது. மூலைக்கு இரண்டு நந்திகளாக எட்டு நந்திகள் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் வெளி முற்றத்தில் சரபேந்திர பூபாலக் குறவஞ்சி மேடை உள்ளது.

தஞ்சாவூர் பெரிய நந்தி புகழ்பெற்றது. 12 அடி உயரம், 20 அடி நீளம், 8 அடி அகலம், 25 டன் எடை என்று விவரம் அறியமுடிகிறது! மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்த வந்தால் கருவறை! 54 அடி சுற்றளவு உள்ள ஆவுடையார் பேரில் 23 அடி உயரம் கொண்ட லிங்கம் கம்பீரமாக காட்சியளிப்பதும் அன்றாடம் அபிேஷகம், புஷ்பம் அணிவித்தல், ஆடை அணிவித்தல் எல்லாம் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் வழியாக ஏறி செய்யப்படுவதும் கண் கொள்ளாக் காட்சியாகும்! நர்மரை நதிக்கரையில் இருந்து இந்த லிங்கம் அமைக்கக் கல் கொண்டு வரப்பட்டுள்ளது! இதனை ஆவுடையாரில் பொருத்த கருவூரார் வந்தாராம்!

பைரவர், விநாயகர், கருவூரார், சுப்பிரமணியர் ஆகிய தெய்வ சந்நிதிகள் கடந்து வந்தால் தெற்கு நோக்கி 10 அடி உயரத்தில் அன்னை பெரிய நாயகி எழுந்தருளியுள்ளார். அடுத்து நடராஜர் சந்நிதி!

தமிழர்களின் கலை, கலாச்சாரம், கற்பனைத் திறன், சிற்பத் திறன் ஆகியவற்றிற்கு எடுத்துக் காட்டாக அமைந்து காண்போர் கண்டுகளித்து மெய்சிலிர்க்க செய்யும் வண்ணம் அமைந்துள்ளள தஞ்சைப் பெரிய கோயில் - தமிழர்களின் ஆட்சித் திறத்திற்கும், அறம் வளர்த்து ஆலயம் எழுப்பிய ஆன்மீகப் பணிக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

இவ்வளவு சிறப்புகள் இந்த கோயில் தற்பொழுது மத்திய அரசின் தொல் பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.

சமீபத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கோயிலுக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை என்பது அனைவருக்கும் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது.