TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

இலங்கை பிரச்சனையில் இனி
ஒருபோதும் இந்தியா தலையிடாது

சென்னை... ஆகஸ்ட்...10

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா இனிமேல் ஒருபோதும் தலையி டாது என்று சமீபத்தில் சுவிட்சர்லாந்த் நாட்டில் உள்ள லுசேனே நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய பாரதத் தின் முன்னாள் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜுலை மாதம் 28-ம் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் இலங்கை இனப்பிரச்சனை குறித்து இந்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி "டல்ஃப்", மற்றும் சில தமிழர் குழுக்கள், இலங்கையின் ஓய்வு பெற்ற உயர் சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாரதத்தின் சார்பில் ஓய்வு பெற்ற வெளியுறவுத்துறை செயலர் ஒருவரும், ஓய்வுபெற்ற உயர் ராணுவ அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டனர். இந்த ஓய் வுப் பெற்ற வெளியுறவுத்துறை செயலர் ஜே.என்.தீட்சித் என்றும், ஓய்வுப் பெற்ற ராணுவ அதிகாரி ஜெனரல் ஏ.எச்.கல்கத் என்றும் ஊர்ஜிதமாகாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பற்றிய விவரங்கள் மிகமிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த 3 நாள் மாநாட்டில், முதலில் கலந்து கொள்ளுவதாக அறிவித்திருந்த எல்.டி.டி.யினர் பின்னர் கலந்து கொள்ளாதது இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை இழக்க செய்துவிட்டது என்று கூறினால் அது மிகையில்லை. இதே போன்று இலங்கை அரசின் சார்பிலும் அதிகாரப்பூர்வமாக பிரதிநிதிகள் எவரும் கலந்து கொள்ளாதது மாநாட்டை உப்பு சப்பில்லாததாக செய்து விட்டதாக சுவிட்சர்லாந்த் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.

புலிகளுக்கு ஆதரவு அதிகம்

இம்மாநாட்டில் உரையாற்றிய இலங்கையின் ஓய்வுப்பெற்ற ராணு வ உயர்அதிகாரிகளும், வல்லுநர்களும், தற்போது இலங்கை அரசு மேற்கொண்டிருக்கும் ராணுவ தாக்குதல்கள் முழுஅளவில் வெற்றி பெற முடியாது என்று கூறினர். வவுனியாவையும் - யாழ்ப்பானத்தை யும் இணைக்கும் நெடுஞ்சாலையை கைப்பற்றுவதற்காக இலங்கை ராணுவம் சமீபத்தில் துவக்கியிருக்கும் "ஜெயசிக்ரு", தனது இலக்கை அடைவது சந்தேகத்திற்கு இடமான ஒன்று பெரும்பாலான பேச்சாளர்கள் கூறினர். மேலும் அப்படியே ஒரு வேளை, இந்த நெடுஞ்சாலையைக் கைப்பற்றினாலும் அதனை, தக்கவைத்துக்கொள்வது இலங்கை ராணுவத்திற்கு செலவு பிடிக்கும் சிக்கலான ஒரு காரியமாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மாநாட்டில் மற்றொரு ஆச்சரியமான விஷயம், இதில் உரை நிகழ்த்திய பெரும்பாலான தமிழர் பிரதிநிதிகள், இலங்கையில் உள்ள தமிழர்களில் 85 சதவிகித தமிழர்கள் எல்.டி.டி.யினரை ஆதரிப்பதாக கூறியது தான்.

ராணுவ வல்லுநர்களின் மற்றொரு கருத்து, எல்.டி.டி.யினர் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இழந்திருந்தாலும், முற்றிலுமாக அவர்களை நிர்மூலமாக்குவது இலங்கை ராணுவத்தின் வல்லமைக்கு மிகவும் அப்பாற்பட்டது என்பது தான்.

மற்றுமொரு முக்கிய விஷயம் புதியதாக போரிடுவதற்கு 10 வயது சிறுவர்களைக்கூட எல்.டி.டி.யினர் நிர்பந்திக்கின்றனர். இளம் பெண்களையும் போர் முனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கின்றனர். இதனால் சண்டை போட விடுதலை புலிகளுக்கு ஆட்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் அதே சமயத்தில் இலங்கை ராணுவத்தில் பெரும் நெருக்கடி தோன்றியுள்ளதாக பேச்சாளர்கள் குறிப்பிட்டனர். போரிட மறுத்து ஓடி விடும் வீரர்களை மடக்கி பிடிப்பதற்கே இலங்கை ராணுவத்திற்கு அதிக நேரம் பிடிக்கும் என்று சில வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்தியா தலையிடாது

இந்த மாநாட்டில் பேசிய இந்தியாவின் ஓய்வு பெற்ற 2 உயர் அதிகாரிகள், இனிமேல் இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா தலையிடுவது சாத்தியமில்லாத ஒன்று என்று கூறியதாக, சமாதான மற்றும் சச்சரவுகளுக்கான கல்வி மையத்தின் இயக்குநர் மேஜர் ஜெனரல் டி.பானர்ஜி தெரிவித்திருக்கிறார். பாரதத்தின் தொலைநோக்கிலான நன்மையை கருத்தில் கொண்டு பார்க்கையில், இலங்கையில் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு தீர்வு காண்பது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று இந்தியா கருதுவதாகவும் மேஜர் ஜெனரல் பானர்ஜி கூறுகிறார்.

ஆனால், ஒரு முறை ராணுவ தலையீட்டின் மூலம் தனது விரல்களை சுட்டுக்கொண்ட இந்திய அரசு, இனி ஒரு போதும் அந்த தவறை செய்யாது என்று பெரும்பாலான பார்வையாளர்கள் கருதுவது என்னவோ உண்மைதான்.

Top