தொழுநோய்க்கு
தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு
புதுதில்லி... பிப்ரவரி...1
தொழுநோய் வராமல் தற்காத்துக் கொள்ள உதவும்
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுதில்லியில்
உள்ள தேசிய தடுப்பு மருந்துகள் பற்றிய ஆய்வகத்தில்
இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகால
ஆராய்ச்சிக்குப்பிறகு இந்த தடுப்பு மருந்து
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே தொழுநோய்க்கு
தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவது இது தான் முதல் முறை
என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தடுப்பு மருந்து
கண்டுபிடிக்கப்பட்டதை உயிரி தொழில்நுட்பத்துறையின்
இயக்ககம் தியாகிகள் தினமான ஜனவரி 30-ந் தேதி
வெள்ளிக்கிழமை புதுதில்லியில் அறிவித்தது.
உலகிலுள்ளதொழுநோயாளிகளில் 60 சதவீதத்தினர்
இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் இந்த கண்டுபிடிப்பு
சுதந்திர பொன்விழாவை கொண்டாடும் நேரத்தில்,
நாட்டிற்கு கிடைத்த ஒரு வெற்றியாக கருதப்படுகிறது. வரும்
ஜுன் மாதம் இந்த மருந்து சந்தையில் விற்பனைக்கு
வரயிருக்கிறது.
நீண்ட ஆராய்ச்சி
தொழுநோய்க்கு தடுப்பு மருந்து
கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் சுமார் 20 ஆண்டுகாலம்
மருத்து ஆராய்ச்சிக்கான இந்திய குழுமத்தாலும், உலக
சுகாதார நிறுவனத்தாலும் நடைபெற்று வந்தன. உயிரி
தொழில்நுட்பத்திற்கான இயக்ககம் துவங்கப்பட்ட பிறகு
அது அளித்த 2 கோடி ரூபாய் நிதியுதவி இந்த
ஆராய்ச்சிகளின் வேகத்தை துரிதப்படுத்தியது. இந்த
மருந்தை தயாரிப்பதற்கான உரிமை அகமதாபாத்தில் உள்ள
கேடிலா பார்மாசூடிகல்ஸ் என்ற நிறுவனத்திற்கு
வழங்கப்பட்டுள்ளது. மருந்தின் விற்பனையின் மூலம்
கிடைக்கும் லாபத்தில் ராயல்டி தொகை தேசிய தடுப்பு
மருந்துகள் ஆய்வகத்துக்கு வழங்கப்படயிருக்கிறது. ஒரு
டோஸ் தடுப்பு மருந்தின் விலை 6 ரூபாயாக இருக்கும். சுமார்
2 ஆண்டுகாலத்திற்கு 8 டோஸ் மருந்துகளை 50 ரூபாய் செலவில்
பெற்று பயனடைவதன் மூலம், தொழுநோய் வர
வாய்ப்புள்ளவர்கள் அதிலிருந்து தங்களை காத்துக்
கொள்ளலாம். இந்த தடுப்பு மருந்திற்கு காப்புரிமை
(பேடண்ட்) பெற்றுக் கொள்ளுவதன் மூலமும் நாடு
பலவிதத்திலும் பயனடைய முடியும் என்று இந்திய தேசிய
விஞ்ஞான கழகத்தின் தலைவரான எஸ்.வரதராஜன்
கூறியிருக்கிறார். இந்தியாவில் தற்போது சுமார் 10 முதல்
20 லட்சம் தொழுநோயாளிகள் இருப்பதாக
கணக்கிடப்பட்டுள்ளது.
Top |