இந்தியாவை
எதிர்நோக்கியிருக்கும் கடும் தண்ணீர் பஞ்சம்
சென்னை... பிப்ரவரி...6
வரயிருக்கும் தலைமுறைகள் இந்தியாவில் கடும் தண்ணீர்
பஞ்சத்தை எதிர்நோக்க இருப்பதாக சமீபத்திய
ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கிறது. சுத்தமான நீருக்காக
ஏற்படயிருக்கும் இந்த போராட்டம் இந்திய சமூகத்தில்
பெருமளவில் பல்வித நெருக்கடிகளை உருவாக்கக்கூடும்
என்றும் அஞ்சப்படுகிறது.
யூனிசெஃப் நிறுவனமும், இயற்கையை பராமரிப்பதற்கான
உலக நிதியமும் இணைந்து இந்தியாவின் பல நகரங்களிலும்,
கிராமப்புற பகுதிகளிலும் நடத்திய ஆய்வுகளின்
அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை இந்த
எச்சரிக்கையை விடுத்துள்ளது. சமீபத்தில்
புதுதில்லியில் நடைபெற்ற "இந்திய குழந்தைகளுக்கும்,
இயற்கைக்குமான சுத்தமான நீர்" என்ற தலைப்பிலான
கருத்தரங்கில் இந்த ஆய்வறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டது. ஏற்கனவே நாட்டின் பல
பாகங்களிலும் சுத்தமான நீருக்காக மக்கள் இடர்பாடுகளை
எதிர்கொண்டிருப்பதாகவும் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுத்தமானநீர்
கிடைக்காத காரணத்தால் சுமார் நாலரை கோடி மக்கள் பல
வியாதிகளுக்கு ஆளாகியிருப்பதாகவும் அறிக்கையில்
கூறப்பட்டிருக்கிறது. இந்த சுகாதார கேடுகள் வரும்
நாட்களில் அதிகரிக்கக்கூடும் என்றும்
எச்சரிக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறையால்
அல்ல கவனக்குறைவால்
ஏற்பட்டிருக்கும் இந்த பஞ்சம்
சுத்தமான நீர் கிடைக்காத பஞ்சத்தால் ஏற்படவில்லை.
ஆனால் சரியான இடத்தில், சரியான நேரத்தில் போதிய
தரமான நீர் கிடைக்காததாலும், நீர் ஆதாரங்களை சரிவர
பயன்படுத்திக் கொள்ள தவறியாதாலுமே ஏற்பட்டுள்ளதாக
ஆய்வறிக்கை விவரிக்கின்றது. இது தவிர பெருகி வரும்
தொழிற்சாலைகளால் சுற்றுப்புற சூழல் மாசுபட்டுள்ளதும்,
நீர் ஆதாரங்களை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்களை
சரிவர நிறைவேற்றாததும் இந்த நிலைமைக்கு
காரணமாகின்றது. பணவசதி படைத்தவர்கள் பெருமளவில்
நீரை பயன்படுத்துவதும், அதே சமயத்தில் அதற்குரிய
விலையை அவர்கள் கொடுக்காததும் மற்றொரு முக்கிய
அம்சமாகும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்களது நீர்
ஆதாரங்களை கட்டுப்படுத்தும் வாய்ப்பின்றி
பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் அதிகமாக
பாதிக்கப்படுவது பெண்கள் தான். ஒரு குடம் தண்ணீருக்காக
நாள்தோறும் பல கிலோ மீட்டர்கள் நடந்து செல்லும் பல
லட்சக்கணக்கான பெண்கள் இந்திய கிராமங்களில்
இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
நிலைமையை
மேம்படுத்த பரிந்துரைகள்
இந்த நிலைமையை மேம்படுத்த
பரிந்துரைகளை ஆய்வறிக்கை முன் வைக்கிறது. நீர்
ஆதாரங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தேவைப்படும்
அதிகாரங்களை பஞ்சாயத்து ராஜ் போன்ற உள்ள ரட்சி
அமைப்புகளிடம் வழங்கவேண்டும். தேவையான நிதி
உதவியையும் இதற்காக மத்திய, மாநில அரசுகள் இவற்றிற்கு
வழங்க வேண்டும். இந்திய அரசியலில் நீருக்காக ஏற்படும்
பிரச்சனை சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை
எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடுமாதலால் இப்பொழுதே
நாம் விழித்துக் கொள்வது நல்லது என்று இந்த
ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
Top |