TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

சென்னை... ஜுன்...2
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் சமாதி புதுதில்லியில் அமைந்துள்ளது. இதன் பெயர் வீர்பூமி. இந்த சமாதியில் வைப்பதற்காக புதுவிதமான, உயர்வகை கற்களால் செய்யப்பட்ட சிற்ப வகையை சேர்ந்த வடிவம் ஒன்று சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த புதுமையான வடிவமைப்பை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற சிற்பியான ஸ்டீஃபன் காக்ஸ் என்பவர் செய்துவருகிறார்.

அவருக்கு மகாபலிபுரத்தில் சிற்பியாக இருக்கும் அருணாச்சலம் என்பவர் உதவியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு உறுதுணையாக பத்துக்கும் மேற்பட்ட மகாபலிபுரத் தில் சிற்பிகளாக இருக்கும் பலர் உதவி புரிந்து வருகிறார்கள். ராஜீவ்காந்தியின் சமாதி அமைந்திருக்கும் வீர்பூமி 86 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாகும். இந்த சமாதியின் வெளிப்புற பகுதி, வட ஆற்காட்டில் உள்ள சோலிங்கபுரம் என்ற பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வெள்ளை நிறக்கற்களால் கடல்போல் உருவமைக்கப்படுகிறது. அதில் 48 தாமரை மலர்கள் மிதந்து கொண்டிருக்கும். இதற்காக சோலிங்கபுரத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வெள்ளை நிறக்கற்கள் கடந்த ஏப்ரல் மாதமே புதுதில்லிக்கு லாரியில் அனுப்பப்பட்டு விட்டன.

இந்த வேலையில் முக்கியமான அம்சம், வீர்பூமியின் நடுபுறத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் 10 அடி பரப்பளவு உள்ள கருப்பு நிறமுள்ள கிரானைட் கல் தான். கண்ணின் கருவிழி போல் தோற்றம் கொண்டிருக்கும் இந்த 10 அடி பரப்பளவுள்ள கருங்கல்லை, ஒரு சிவப்பு நிற கல்மேடையில் வைக்கப்பட ஸ்டீஃபன் காக்ஸ் திட்டமிட்டுள்ளார். சிற்பி காக்ஸ், இந்த கிரானைட் கல் கருவிழி, ராஜீவ்காந்தி வன்முறையால் கொல்லபட்டதை கலைநோக்கில் எடுத்து காட்டுவதாக கூறுகிறார்.

இந்த கருங்கல்லை கண்டுபிடித்து வெட்டி எடுப்பது தான் சிற்பி காக்ஸ் மற்றும் அவரது உதவியாளர் அருணாச்சலத்திற்கு மிகவும் சிரமமான வேலையாக கடந்த 8 மாதங்களாக இருந்து வந்தது.

மூன்று முறை வேறுவேறு இடங்களிலிருந்து இந்த கருங்கல்லை வெட்டி எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன. முடிவில், கடந்த ஏப்ரல் மாதம் செங்கல்பட்டுக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்டமான ஒரு கருங்கல் சென்னையை அடுத்த கல் பிரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

10 அடி பரப்பளவுக்கு கருங்கல்லை வெட்டி எடுக்கும் தொழில் நுட்பம் ஆசியாவிலேயே எங்கும் இல்லாததால், இந்த கல்லை துண்டு துண்டாக வெட்ட முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு வெட்டப்பட்ட கல் 10 அடி நீளமும், 5 அடி அகலமும்,4 அங் குலம் பருமனும் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. இவ்வாறு 18 கற்கள் தயாரிக்கப்பட்டு வீர்பூமியில் ராஜீவ் சமாதியின் மையப்பகுதியில் கருங்கல் கருவிழியாக சிவப்பு கல் மேடையில் வடிவமைக்கப்பட இருக்கின்றன. அடுத்த மாதம் வீர்பூமியில் செதுக்கப்பட இருக்கும் இந்த கலை நுட்பம் மிகுந்த வேலை பாட்டிற்கு 65 லட்ச ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

ராஜீவ் சமாதியில் இத்தகையதொரு கலை நயம் மிக்க அற்புத வேலைப்பாட்டாலான கருங்கல் கருவிழி அமைக்கபட இருப்பது குறித்த செய்தி மிகுந்த ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கடந்த

2 ஆண்டுகளாக இப்பணி நடைபெறுகிறது. இங்கிலாந்து நாட்டின் சிற்பி ஒருவர், பாரத தலைவர் ஒருவரின் நினைவிடத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்றால், அது அரசியல் சர்ச்சையை கிளப்பும் என்று கருதி ராஜீவ் காந்தி

ஃபவுண்டேஷன் இந்த தகவலை சிதம்பர ரகசியமாக காப்பாற்றி வந்திருக்கிறது. இந்த பணியை பாரத அரசின் பொது பணித்துறை தான் பொறுப்பேற்று நிறைவேற்றி வருகிறது.

எது எப்படியோ உலகப்புகழ் மிக்க ஒரு பாரத தலைவருக்கு சர்வதேச புகழ் வாய்ந்த சிற்பி ஒருவர் தலைமையில் நினைவிடம் செதுக்கபடுவது சாலச்சிறந்ததல்லவா?.

Top