TOnline TamilNadu Online
INDIA'S  FIRST  INDIAN  LANGUAGE  WEB  MAGAZINE
Home
Art Music & Dance Literature  Vanavail Tourism Jokes Sprituality 

திருக்கடையூரில் ஆறாம் நூற்றாண்டு துர்க்கைச் சிற்பம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகில் உள்ள திருக்கடையூரில் கி.பி.6 முதல் 7-ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட துர்க்கையம்மனின் சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பல்லவர் காலத்தை சேர்ந்த சிற்பமாகும்.

கல்வெட்டுகளை ஆராயும் பயிற்சி மாணவரான பாண்டியன் என்பவர், திருக்கடையூரில் ஷ்ரீகாலகால தேவர் கோயிலில் துர்க்கையம்மனின் சிற்பம் ஒன்று இருப்பதாக தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து மயிலாடுதுறையை சேர்ந்த கோ.முத்துசாமி எனும் கல்வெட்டு ஆய்வாளர் ஷ்ரீகாலகால தேவர் கோயிலில் ஆய்வினை மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் கோயிலினுள் நுழைந்தவுடன் வலதுபக்க சுவரில் துர்க்கையின் சிற்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிற்பத்தின் மீது சுமார் ஒரு அங்குல கனத்திற்கு 5 அடுக்குகளாக நீலம், சிவப்பு , மஞ்சள், வெள்ளை , பச்சை நிறங்களில் பூச்சு பூசப்பட்டிருக்கிறது. இவை இந்த கோயிலுக்கு இது வரை 4 முறை குடமுழுக்கு நடைபெற்றுள்ளதை எடுத்துக்காட்டுவதாக தொல்பொருள் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சிற்பத்தை "பாய்கலைப்பாவை" என்றும் "வெற்றித் தெய்வம் கொற்றவை" என்றும் பழங்காலம் முதலே தமிழர்கள் கூறிவருவதாக ஆய்வுத்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

Top